பத்ரி சேஷாத்ரி

Monday, November 16, 2009

கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்

1980-கள் இறுதியில் இணையத்தில் Usenet Newsgroups என்று ஒன்று கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. அப்போது soc.culture.indian என்ற குழு மிகவும் பிரபலமானது. இப்போது இணையத்தில், வலைப்பதிவுகளில் காணப்படும் அத்தனை சண்டைகளும் அதில் அப்போதே நடந்தன. இன்று வலைப்பதிவுகளில் தென்படும் அருமையான, அற்புதமான எழுத்துகளும் அபூர்வமாகத் தென்பட்டன.

அப்படி எழுதக்கூடிய ஒருவராக ரமேஷ் மஹாதேவன் இருந்தார். இன்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகத் தேடிப்பார்த்தால் அவர் எழுதியது உங்களுக்குக் கிடைக்கும். அவர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாகவும் இணையத்தில் சில இடங்களில் கிடைக்கலாம். அஜய் பால்வாயண்டீஸ்வரன் என்று அவர் உருவாக்கிய பாத்திரம், பத்திரிகைகளில் மட்டும் கதைகளாக வந்திருந்தால், துப்பறியும் சாம்பு பாத்திரத்துக்கு இணையாகப் பிரபலமாகியிருக்கும். சென்னைக்கு திரும்பிய அவர், இப்போது SSN பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார்.

கர்நாடக இசை பற்றிய ஓர் அறிமுகப் புத்தகத்தை, A gentle introduction to Carnatic Music என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். எளிமையாக, ராகம், தாளம், மேற்கத்திய செவ்வியல் இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றுமே தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில், எழுதப்பட்டுள்ளது. 100 பக்கத்துக்கு உள்ளாக இருக்கும் இந்தப் புத்தகம், Oxygen Books பதிப்பாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 100/-

சென்னை இசைக் கச்சேரி சீசன் ஆரம்பமாகும் நிலையில் இதை வாங்கிப் படித்துப் பலரும் பயன்பெறுவர் என்று நம்புகிறேன்.

அடுத்து... இந்தப் புத்தகத்தை விரைவாகத் தமிழில் கொண்டுவர விரும்புகிறோம். கர்நாடக இசை தெரிந்த, நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடியவராக இருந்தால் நல்லது. நீங்கள் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...

சென்ற வாரம் செபி (SEBI) ஓர் ஆணை பிறப்பித்து, இனி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை பங்குச்சந்தை வழியாக வாங்கலாம், ரிடீம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள Fundsindia.com நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் மீனாக்ஷியிடம் தொலைபேசியில் பேசினேன். அந்த பாட்காஸ்ட் இங்கே.

இங்கேயே கேட்க



தரவிறக்கிக்கொள்ள

பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகுமா?

படிக்க: Will disparity split the human race?

கடந்த சில நூற்றாண்டுகளில், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. முன்னர் பற்றாக்குறை இருந்தாலும், அதுவும் பரவலாக இருந்தது. ஆனால் இப்போது பற்றாக்குறை ஒரு சிலருக்கும், வசதி வாய்ப்புகள் ஒரு சிலருக்கும் என்று ஆகியுள்ளது. இதனால் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, இரு வெவ்வேறு மனித species-இனம் உருவாகக்கூடுமா என்பதைப் பற்றிப் பேசுகிறது மேலே குறிப்பிட்ட செய்தி.

அது எப்படி நிகழும்? உணவுப் பற்றாக்குறை உள்ள ஒரு சமூக அமைப்பை எடுத்துக்கொள்வோம். அந்த நிலையில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் இறந்துவிடும். ஆனால் ஏதோ மரபணு மாற்றம் (genetic variation) உள்ள ஒருசில குழந்தைகள் மட்டும் கிடைக்கும் மிகக்குறைந்த உணவை உட்கொண்டு உயிர்வாழும் திறன் படைத்ததாக இருக்கும். குறைந்த உணவில் காலம் தள்ள ஏதுவாக, உடலில் வளங்கள் அதிகம் தேவைப்படும் சில பாகங்களை அந்த மாறிய மரபணுக்கள் குறைவாக உருவாக்கவேண்டியிருக்கும். அப்படிச் செய்வதன்மூலம்தான் அந்த உயிர் வளர்ந்து நீடிக்கமுடியும். அதிக வளங்கள் தேவைப்படும் பகுதி ஒன்று மூளை. எனவே மூளையைச் சற்றே சிறிதாக்க அந்த மரபணு முற்படலாம். அத்துடன் எலும்புக்கூட்டைச் சிறிதாக்க. இதனால் குறைந்த உணவைக் கொண்டு உடலைப் பராமரிக்கமுடியும். ஆனால் உடல் சிறியதாக, மூளை சிறியதாக இருக்க நேரிடும்.

இப்படியே பல தலைமுறைகள் - 10,000 முதல் 20,000 ஆண்டுகள் இதே நிலை தொடரத் தொடர, உணவு குறைவாகக் கிடைக்கும் இந்தச் சமூகம் உணவு அதிகம் கிடைக்கும் குழுவிலிருந்து நல்ல உடல் வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடும். மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் (100,000, 500,000) தாண்டத் தாண்ட, அதிகபட்ச மரபணு மாற்றங்களுடன் இரு வெவ்வேறு மனித இனங்கள் (homo , homo ) இந்த உலகில் இருக்கும் நிலை ஏற்படலாம்.

ஒரே மனித இனமாக, 99.9% மரபணுக்கள் ஒத்தவையாக இருக்கும் நிலையிலேயே, மனித இனக்குழுக்கள் ஒருவரை ஒருவர் நசுக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக அமைப்பிலேயே இப்படி உள்ளது என்றால், மரபணு ரீதியில் இரு ஸ்பீஷிஸ் என்றால் தொடர்ச்சியான போர் நடக்கும். ஒருவரை மற்றவர் அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

விரைவில் இந்நிலை மாறவேண்டும் என்றால் பசிப் பிணியை உடனடியாகப் போக்கவேண்டும்.

Saturday, November 14, 2009

இனி இது சேரி இல்லை...

அன்னை சத்யா நகர் பற்றி சிலமுறை பதிவுகளில் எழுதியிருக்கிறேன். சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை சத்யா நகர் என்னும் சேரிப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்குள்ள மக்கள், அரசு இயந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த மாற்றங்கள் என்னென்ன? அவற்றால் நீடித்த முன்னேற்றம் அந்த இடத்தில் ஏற்படுமா? சேரி என்றால் என்ன? சேரிகளில் உள்ள மக்கள் படும் பாடு என்ன? வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா? சேரியை மாற்றுவது என்பது வெறும் பணம் சார்ந்த ஒன்றா? பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது? சுத்தம், சுகாதாரம் என்பதை எங்கும் மலரச் செய்யமுடியுமா?

இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் ஆங்கிலத்தில் "A Slum No More" என்று எழுதப்பட்டு (அதுவும் நியூ ஹொரைசன் மீடியா வெளியீடுதான்), பின்னர் தமிழில் மறு எழுத்தாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு பதிப்பக வெளியீடு.

இந்தப் புத்தகம் படிப்பதன்மூலம் சில கார்பரேட் நிறுவனங்கள், Corporate Social Responsibility என்ற அடிப்படையில் மேலும் சில சேரிகளை எடுத்துக்கொண்டு, அங்கு மாற்றங்களைக் கொண்டுவந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

செப்டம்பர் 2008-ல் நான் எழுதிய பதிவு இது. இதிலிருந்து தொடங்கிய உறவில், பைரவன் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

Friday, November 13, 2009

கண்டுபிடிப்பாளர் டேவிட் ஒலிப்பதிவு பாட்காஸ்ட்

இங்கேயே கேட்க:



தரவிறக்கிக் கொள்ள

Wednesday, November 11, 2009

கண்டுபிடிப்பாளர் டேவிட்

வெகு நாள்களாகவே பேரா. சுவாமிநாதன், பல சுவாரசியமானவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டு வருகிறார். பாலசுப்ரமணியம் B+ என்று ஒருவர். பிறகு டேவிட் என்று ஒருவர். இரு நாள்களுக்கு முன், “டேவிட் ஹைதராபாதிலிருந்து வருகிறார், எல்லோரும் சந்திக்கலாமே” என்றார். நான் என் வீடியோ கேமராவைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டேன்.

டேவிடுக்கு இப்போது 63 வயதாகிறது. பாதி தமிழர். அவரது தந்தை கர்நாடக மாநிலத்தில் மருத்துவராக இருந்தார். ஆனால் தாய் ஆந்திராவைச் சேர்ந்த, எழுதப் படிக்கத் தெரியாதவர். டேவிடுக்கு நான்கு வயதாகும்போது அவரது தந்தை இறந்துவிட, தந்தை வழி உறவினர்கள் சொத்தைப் பிடுங்கிக்கொண்டு, டேவிடின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு விரட்டிவிட்டனர். அடுத்த சில ஆண்டுகள் அனாதை இல்லம் ஒன்றில் தங்கி சில ஆண்டுகள் பள்ளிப் படிப்பைப் படித்த டேவிட், பின் தன் 11 வயதில் ஏதோ வேலை செய்து பிழைக்க ஆரம்பித்தார். படிப்புக்கு முழுக்கு.

ஆனால், டேவிட் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு புதிய புதிய கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார். சில கருவிகளைக் எடுத்துக்கொண்டு NRDC என்ற அரசு அமைப்பிடம் எடுத்துக்கொண்டு செல்ல, அவர்கள் அப்போது ஐஐடி டெல்லியில் பேராசிரியராக இருந்த சுவாமிநாதனிடம் அந்தக் கண்டுபிடிப்புகளை மதிப்பிட அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால், டேவிடின் பல கண்டுபிடிப்புகள் பிறரால் எடுத்துக்கொள்ளப்பட்டு, டேவிட் பல முறை ஏமாற்றப்பட்டுள்ளார். இருந்தும், பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக அவர் பல பேடண்டுகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த இரு தினங்களாக அவர் சென்னையில் இருந்தது, புதிய ஒரு பேடண்ட் பதிவு செய்வதற்காக.

இப்போது, ஹைதராபாத் ஐஐஐடியில் Engineering Technology and Innovation Centre (ENTICE) மையத்தில் கண்டுபிடிப்பாளராக வேலை செய்கிறார். பள்ளிப் படிப்பையே முடிக்காத ஒருவருக்கு இந்தியக் கல்வி/ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் திறமையின் அடிப்படையில் வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பதே நல்ல விஷயம்.

கீழே உள்ள வீடியோவை நேரம் கிடைக்கும்போது பாருங்கள். டேவிட் இப்போது கவனம் செலுத்தும் சில கண்டுபிடிப்புகள்: குறைந்த செலவாகும், சூரிய ஒளியில் இயங்கும் கதிர் அறுக்கும் இயந்திரம், கிராமப்புறங்களில் மாடுகளைக் கொண்டு மின்சாரம் உருவாக்குதல், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் நெசவு இயந்திரம், குறைந்த திறனில் இயங்கும் மின்விசிறி, இன்னும் பல.


Watch An interaction with TJ David, inventor and innovator (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch An interaction with TJ David, inventor and innovator (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Monday, November 09, 2009

ஆர்.கே.சண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு

சென்ற மாதம், அக்டோபர் 26-ம் தேதி அன்று கோவை இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘ஆர்.கே.சண்முகம் செட்டியார்’ வாழ்க்கை வரலாறு வெளியானது. அது தொடர்பான சிறு வீடியோ துண்டும், முழு வீடியோ துண்டும் கீழே. சிறு துண்டு, யூட்யூப் மூலமும், முழு துண்டு veoh மூலமும் கிடைக்கும்.

புத்தகத்தை வாங்க






Watch Launch of a Tamil biography of RK Shanmugam Chettiar (26 October 2009) in Family  |  View More Free Videos Online at Veoh.com

Buy NHM BOOKS on

Amazon

Kizhakku Nalam Varam

மொழிபெயர்ப்புகள்

என் புத்தகங்கள்

  
  
  
  

துறைகள்